Archives: அக்டோபர் 2018

இருளில் நம்பிக்கை

சண்டையிடும் மாகாணங்கள் காலம் (கி மு 475-246) என்று அறியப்பட்ட காலக்கட்டத்தில் கு யுவான் என்ற விவேகமான, நாட்டுப்பற்றுள்ள சீன அரசு அதிகாரி வாழ்ந்தார் என்ற மரபுக்கதை ஒன்று உண்டு. நாட்டை அழிக்கக்கூடிய ஒரு ஆபத்து நெருங்கி வருவதாக அவர் அரசருக்கு அநேக முறை எடுத்துகூற முயன்றும், அரசர் அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் கு யுவான் நாடு கடத்தப்பட்டார். தான் எந்த எதிரி குறித்து எச்சரித்தாரோ அந்த எதிரியால் தன் அன்புக்குரிய நாடு அழிந்தது என்று அறிந்தபோது, தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

சில விஷயங்களில் கு யுவானின் வாழ்க்கை எரேமியாவின் வாழ்க்கையை ஒத்திருக்கிறது. அவரது எச்சரிக்கையை ஏளனம் செய்த அரசர்களை அவரும் சேவித்தார். அவர் நாடும் சூறையாடப்பட்டது. ஆனால் கு யுவான் நம்பிக்கை இழந்துபோனார், எரேமியாவோ உண்மையான நம்பிக்கை கொண்டார். ஏன் இந்த வித்தியாசம்?

உண்மையான நம்பிக்கை அளிக்கும் ஆண்டவரை எரேமியா அறிந்திருந்தார். “உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள்” என்று கடவுள் அந்த தீர்க்கதரிசிக்கு உறுதியளித்தார். கி மு 586ல் எருசலேம் அழிக்கப்பட்டாலும், அது பின்னர் மீண்டும் கட்டப்பட்டது (நெகேமியா 6:15 பார்க்க).

நம்பிக்கை இழக்கவைக்கும் சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரலாம். அது மோசமான தகவலைத் தரும் மருத்துவ ஆய்வு அறிக்கையாகவோ, பறிபோன வேலையாகவோ, சிதைந்துபோன குடும்பமாகவோ இருக்கலாம். ஆனால் வாழ்க்கை நம்மை கீழே தள்ளும்போதும், நாம் நிமிர்ந்து பார்க்கமுடியும் – ஏனென்றால் கடவுள் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்! நம்முடைய நாட்கள் அவர் கைகளில் இருக்கிறது. நம்மை அவர் இருதயத்திற்கு அருகில் வைத்திருக்கிறார்.

வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுதல்

வேதாகமத்தை வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதால் ஏற்படும் முடிவில்லாத விவாதங்களில் பங்கேற்காமல் வெளியேறுவது எவ்வளவு கடினமானது என்று என் தந்தை கூறக்கேட்டிருக்கிறேன். அதே சமயம், இரண்டு தரப்பினரும் அவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது நன்றாக இருக்கும் என்றார்.

ஆனால் சமரசமடையாத வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது சாத்தியமா? புதிய ஏற்பாட்டில், பவுல் ரோமருக்கு எழுதும் கடிதத்தில் இதற்கான பதிலைத் தருகிறார். சமூக, அரசியல், மத பிணக்கங்களில் சிக்கியிருந்த வாசகர்களுக்கு எழுதும்போது, எதிர் எதிர் நிலைமையில் உள்ளவர்கள்கூட எப்படி ஒரு பொதுவான தளத்தில் சேரலாம் என்று பரிந்துரை செய்கிறார் (14:5-6).

கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது குறித்து, நம்முடைய கருத்துக்களுக்காகவும், நம்முடைய வேறுபாடுகளில்  நாம் ஒருவரை ஒருவர் எப்படி நடத்துகிறோம் என்பதற்காகவும், நாம் கடவுளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார் (வச. 10).

நம்முடைய கருத்துக்களைவிட முக்கியமான விஷயங்கள் – நம்முடைய வேதாகம விளக்கங்களையும்விட – உண்டு என்பதை நாம் நினைவுகூர பிணக்கங்கள் உதவும். கிறிஸ்து நம்மை நேசித்ததைப்போல நாம் ஒருவரை ஒருவர் நேசித்தோமா, நம்முடைய எதிரிகளையும்கூட நேசித்தோமா என்று நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

இப்போது யோசித்துப் பார்த்தால்,  இரண்டு தரப்பினரும், பரஸ்பர அன்பு மற்றும் மரியாதையோடு, அவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது நன்றாக இருக்கும் என்று என் தந்தை கூறியது நினைவுக்கு வருகிறது.

நன்றி மனப்பான்மையைப் பற்றிகொளல்

தீராத வலி, நடக்க முடியாமல் பட்ட கஷ்டம் ஆகியவற்றால், பல ஆண்டுகளாக நான் அடக்கி வைத்திருந்த சலிப்பும், விரக்தியும் வெளிவரத் தொடங்கின. என்னுடைய அதிருப்தியின் காரணமாக அதிகமாக அதிகாரம் செய்பவளாக, நன்றி இல்லாதவளாக மாறினேன். என்னுடைய கணவர் என்னை நன்றாக கவனித்துக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினேன். அவர் வீட்டை சுத்தம் செய்தது சரியில்லை என்று குறை சொன்னேன். அவர் மிக அருமையாக சமைப்பார் என்றாலும், வித விதமாக சமைக்கவில்லை என்று புலம்பினேன். நான் அதிருப்தியாக இருப்பது அவரை அதிகமாக காயப்படுத்துகிறது என்று அவர் சொன்னபோது, நான் கோபம் கொண்டேன். நான் படும் அவஸ்தை அவருக்குப் புரியவில்லை. ஆனால் கடைசியில் கடவுள் என் தவறுகளை எனக்குப் புரியவைத்தார். நான் கடவுளிடமும், என் கணவரிடமும் மன்னிப்புக் கேட்டேன்.

வித்தியாசமான சூழலுக்காக ஏங்குவது, குறைசொல்லும் குணத்தை அல்லது, உறவுகளை சிதைக்கும் சுயநலத்தை நம்மில் ஏற்படுத்தும். இஸ்ரவேலர்களுக்கு இந்தத் தடுமாற்றம் பரிச்சயமான ஒன்று. அவர்கள் எப்போதும் திருப்தி அடையாமல், கடவுள் கொடுத்ததைக்குறித்து முறுமுறுத்தார்கள் (யாத்திராகமம் 17:1-3). கடவுள் “வானத்திலிருந்து அப்பம்” (16:4) வருஷிக்கப்பண்ணி, தம் ஜனங்களை போஷித்தாலும், அவர்கள் மற்ற உணவுகளுக்காக ஏங்க ஆரம்பித்தார்கள் (எண்ணாகமம் 11:4). கர்த்தரின் அன்பையும், பராமரிப்பையும் வெளிப்படுத்தும் அன்றாட அற்புதங்களைக் குறித்து சந்தோஷப்படாமல், இஸ்ரவேலர்கள் இன்னும் அதிகமாக, நல்லதாக, வித்தியாசமானதாக, தாங்கள் முன்னே சாப்பிட்டதுகூட (வச. 4-6) வேண்டும் என்றார்கள். தங்களுடைய விரக்தியை அவர்கள் மோசேயிடம் காண்பித்தார்கள் (வச. 10-14).

கர்த்தரின் நற்குணத்தையும், விசுவாசத்தையும் நம்புவது, நமக்கு நன்றி மனப்பான்மையைத் தரும். எண்ணற்ற வழிகளில் நம் மேல் அக்கறை காட்டி, நம்மை பாரமரிப்பதற்காக அவருக்கு நாம் இன்று நன்றி சொல்வோம்.

என் சித்தம் அல்ல, உம் சித்தம்

கமில், ஜோயெல் தம்பதியின் எட்டு வயது மகள் ரீமா ஒரு அரிய வகை இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்தபோது அவர்கள் உள்ளம் உடைந்துபோனார்கள். இந்த புற்றுநோயின் காரணமாக, ரீமாவுக்கு மூளைக்காய்ச்சல் வந்து, பின்னர் பக்கவாதம் வந்து, இறுதியில் கோமா என்ற ஆழ்மயக்க நிலைக்குச் சென்றாள். மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழு, அவள் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி, அவள் பிழைப்பதற்கான சாத்தியம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவு என்று சொல்லி, ரீமாவின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார்கள்.

கமிலும், ஜோயெலும் ஒரு அற்புதத்திற்காக உபவாசம் இருந்து ஜெபம் செய்தார்கள். “முடிவு எதுவாக இருந்தாலும், நாம் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். மேலும் ‘என் சித்தமல்ல, உம் சித்தம்’ என்று இயேசுவைப்போல ஜெபிக்கவேண்டும்” என்று கமில் சொன்னார். “ஆனால் கடவுள் அவளை சுகப்படுத்த வேண்டும் என்றே நான் மிகவும் வாஞ்சிக்கிறேன்” என்று ஜோயெல் கூறினார். “ஆம்! நாம் கேட்போம். ஆனால் இயேசு செய்ததுபோல, நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுப்பது மிகவும் கடினம் என்றாலும், அப்படிச் செய்வதே கடவுளை கனம்பண்ணுவதாகும்” என்று கமில் கூறினார்.

சிலுவையில் அறையப்படும் முன், “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்” (லூக்கா 22:42). “இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்” என்று ஜெபித்ததால், சிலுவையில் அறையப்பட வேண்டாம் என்றார்; ஆனால் பிதாவின்மேல் உள்ள அன்பின் காரணமாக, பிதாவின் சித்தத்துக்கு தன்னை ஒப்புவித்தார்.

நம்முடைய ஆசைகளை கடவுளிடம் ஒப்புவிப்பது எளிதல்ல. கஷ்டமான தருணங்களில், அவருடைய ஞானத்தை புரிந்துகொள்வதும் எளிதல்ல. கமில், ஜோயெல் தம்பதியின் ஜெபத்திற்கு மிகவும் விசேஷித்த வகையில் பதில் கிடைத்தது. ரீமா இன்று ஆரோக்கியமான 15 வயது பெண்ணாக இருக்கிறாள்.

கடவுள் நம்முடைய ஒவ்வொரு கஷ்டத்தையும் புரிந்துகொள்கிறார். அவருடைய வேண்டுதல் நமக்காக கேட்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு தேவையின்போதும், எப்படி கடவுள்மேல் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று நமக்குக் காண்பித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பொய்களும் உண்மையும்

 

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் “சத்தியத்தை அறிவோம்”, பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32). 

 

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

 

சரியாய் எதிர்வினையாற்றுங்கள்

கௌரவால் தன் கண்களை நம்ப முடியவில்லை. "அவர்கள் ஏன் இந்த வெள்ளை உடையில் இருக்கும் நல்ல மாமாவை அடிக்கிறார்கள்" என்று எண்ணினான். அவன் இயேசுவைப் போல உடையணிந்த ஒரு நபர் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வதையும் , போலி இரத்தம் சொட்டச் சொட்டவும், வீரர்களைப் போல உடையணிந்தவர்களால் சாட்டையால் அடிக்கப்படுவதையும் கண்டான். அது ஒரு சபையின் புனித வெள்ளி பவனி. ஆனால் அந்த காட்சி கௌரவுக்கு மிகவும் நிஜமாக இருந்தது. கௌரவ் ஒரு மனநலிவு நோயாளி, மேலும் அவனது நிலை அவனை மிகவும் ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் இருக்கும்படி செய்தது. அம்மாவின் புடவையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “அம்மா, தயவு செய்து அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!” என்று புலம்பியபடியே அவன் இதயம் இரக்கத்தால் நிறைந்தது.

கௌரவரைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். சிலருக்கு எளிதில் இரக்கம் உண்டாகலாம் என்றாலும், மற்ற நமக்கோ அதைப் பயிற்சி செய்ய வேண்டும். கொலோசெ சபையினர்க்கு தங்கள் பழைய வாழ்க்கை முறையை "அகற்ற" வலுவாக வலியுறுத்தப்பட்டது. அழுக்காகவும் கந்தையாகவும் இருந்த ஆடையைத் தூக்கி எறிவது போல, கோபம், மூர்க்கம் , பொறாமை, வாயில் பிறக்கலாகாத தூஷணம், வம்பு வார்த்தைகள் (வ.8) ஆகியவற்றைக் கொண்டிருந்த தங்கள் உலகத்துக்குரிய சுபாவத்தைக் களைந்துவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாறாக, இரக்கம், தயவு, மனத்தாழ்மை மற்றும்நீடிய பொறுமை (V.12)ஆகிய நற்பண்புகளை அணிந்துகொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், அவை " இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும்" (சங்கீதம் 145:8). கொண்ட தங்கள் சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கின்றன.

இரக்கம், கருணை, தாழ்மை மற்றும் தயவு ஆகியவை இன்றைய உலகில் பெரும்பாலும் பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் இதைத்தான் மற்றவர்கள் நம்மில் பார்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் (வ.12). சக பணியாளர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான நமது அனுதின உறவுகளில் இந்த குணாதிசயங்களுடன் செயல்படுவது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாயினும் நாம் சரியாக எதிர்வினையாற்ற உறுதிகொள்ள வேண்டும், ஏனெனில் இந்த வழிமுறையில்தான் நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகம் அறியும் ரெபேக்கா விஜயன்